கே.பாலசந்தர்: இயக்குநர்களின் சிகரம்!

கே.பாலசந்தர் நினைவு தின சிறப்புப் பகிர்வு
கே.பாலசந்தர்: இயக்குநர்களின் சிகரம்!

தமிழ் சினிமாவில், தங்களின் அசாத்தியத் திறமையால் வெற்றிக்கொடி பறக்கவிட்ட இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். இன்னமும் இருக்கிறார்கள். ஆனால், திரையுலகிலும் ரசிகர்கள் வட்டாரத்திலும் ‘டைரக்‌ஷன் டச்’ என்றொரு வித்தையை, தனது இயக்கத்தால் வசப்படுத்திக் கொண்டவர் கே.பாலசந்தர். இவரின் படக்காட்சிகளையும் வசனங்களையும் கொண்டுதான் ‘டைரக்‌ஷன் டச்’ என்ற வார்த்தையே தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்பார்கள்!

நடிகர்களின் பக்கம் இருந்த ரசிகப் பார்வையையும் மனதையும் இயக்குநர்களின் பக்கம் திருப்பியதில் ஸ்ரீதருக்கு முக்கியமான பங்கு உண்டு. அதையடுத்து, செய்கூலியோ சேதாரமோ இல்லாமல், இன்னும் எல்லையை விஸ்தரித்து ‘இது கே.பி. படம்’ எனும் முத்திரையைப் பதித்து பாலசந்தர் படைத்திட்ட அனைத்துமே பொக்கிஷம்!

திருவாரூர் பக்கமுள்ள நன்னிலம் எனும் சிறிய கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தவர் கே.பாலசந்தர். ஒரு பக்கம் அரசு வேலை, இன்னொரு பக்கம் நாடகம் என்று இயங்கிக் கொண்டிருந்தார். நாடகங்களில், அப்போதே தனித்துவம் காட்டினார். அந்த மேடைகளிலேயே பல புதுமைகள் செய்தார்.

அடுத்து சினிமாவின் பக்கம் வந்தார். பிறகு ரசிகர்களின் பக்கம் சென்றார். அதையடுத்து ரசிகர்களும் தமிழ்த் திரையுலகமும் அவரின் பக்கம் சென்றது.

எம்ஜிஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதினார். படத்தி பி.மாதவன் இயக்கினார். ’சர்வர் சுந்தரம்’ படத்துக்கு கதை வசனம் எழுதினார். அப்படத்தை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள்.

சிவாஜியை வைத்து, ‘எதிரொலி’ எனும் ஒரேயொரு படத்தை இயக்கினார். ஆனால் தன் முதல் படத்தின் நாயகனாக, பெரிய நடிகர்களின் பக்கம் பாலசந்தர் செல்லவில்லை. தனது நண்பனும் நாடக ஹீரோவாகவும் இருந்த நாகேஷை நாயகனாக்கினார். படம் முழுக்க மருத்துவமனையைக் கதைக்களமாக்கி, ‘நீர்க்குமிழி’ என்ற பெயரில் புதுப்பாய்ச்சல் காட்டினார்.

அடுத்தடுத்த கதைகளின் நாயகர்களும் எளிய நடிகர்களாகவே இருந்தார்கள். நாகேஷையும் சுந்தர்ராஜனையும் கொண்டு உருவாக்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பாலசந்தர் படமென்றால் இப்படித்தான் இருக்கும் என்று எல்லைக் கோடுகளை கிழிக்கமுடியாது. ’நீர்க்குமிழி’ மாதிரி சோகம் பிழியக் கொடுப்பார். ‘நாணல்’ மாதிரி திடுக்கிடும் படங்களையும் தருவார். ‘பாமா விஜயம்’ மாதிரி சிரிக்கவைப்பார். ’அனுபவி ராஜா அனுபவி’யில் இரண்டு நாகேஷைக் கொண்டு இன்னும் வெடிச்சிரிப்பு மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்டார்.

பாலசந்தர் இயக்கத்தில், ஓடிய படங்கள் ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை காட்சிக்குக் காட்சி தூவியபடியே இருப்பதுதான் பாலசந்தர் ஸ்டைல். அவை வாங்கிக் கொடுத்த பெயர்தான் ‘பாலசந்தர் டச்!’

நாடகத்தைத் தொடங்கும்போது, கடவுள் வாழ்த்து போடுவார்கள். பிறகுதான் நாடகத்தை ஆரம்பிக்கும் போது, நாடகங்களை திருக்குறளில் இருந்து தொடங்குவதுதான் பாலசந்தரின் வழக்கம். இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது.

படத்தை எந்தக் கம்பெனி தயாரித்தாலும், எந்த நிறுவனம் எடுத்தாலும், பாலசந்தர் இயக்கிய படங்களில் மட்டும், திருவள்ளுவர் முதலில் வந்துவிடுவார். ‘அகர முதல எழுத்தெல்லாம்..’ குறளும், குரலும் ஒருசேர ஒலித்துவிடும். பின்னர், பாலசந்தரின் நிறுவனமான ‘கவிதாலயா’வின் லோகோவாகவும் திகழ்ந்தார் திருவள்ளுவர். அப்படி, திருக்குறளின் மீதும் திருவள்ளுவரின் மீதும் தீராக்காதல் கொண்டிருந்தார். பிற்காலத்தில், பாலசந்தர் படங்களின் தாக்கத்தாலும், திருக்குறளை பிள்ளையார் சுழியாக்கிக் கொண்ட ஈர்ப்பாலும், இயக்குநர் வி.சேகர், திருவள்ளுவர் கலைக்கூடம் என்று தன் கம்பெனிக்குப் பெயர் சூட்டினார்.

எம்ஜிஆரும் சிவாஜியும் முன்னணியில் இருந்த நேரத்தில், முதல் படத்தை இயக்கிய பாலசந்தரும் நாயகன் நாகேஷும் ‘வாடா போடா’ நண்பர்கள். எத்தனையோ படங்களில் நாகேஷுக்கு கேரக்டர் கொடுத்துக்கொண்டே இருந்தார். நாகேஷ் உடம்புக்குள் பாலசந்தரும், பாலசந்தரின் புத்திக்குள் நாகேஷும் ஊடுருவியிருந்தார்கள் என்பார்கள். இதை பாலசந்தரே சொல்லியிருக்கிறார்.

எம்ஜிஆர் சிவாஜியின் பக்கம் செல்லாமல் படங்களை யதார்த்தமாக இயக்கிய பாலசந்தர் செய்த மற்றுமொரு இரட்டை சாதனை.. கமல், ரஜினி! எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்து, அந்த நிலைக்கான இடத்துக்கு கமல், ரஜினியைக் கொண்டு வந்தார். கமல் சிவாஜிக்கு நிகராகவும் ரஜினி, எம்ஜிஆருக்கு நிகராகவும் பார்க்கப்பட்டது மற்றுமொரு சரித்திரம்!

மருத்துவமனைக்குள்ளேயே நடக்கும் ‘நீர்க்குமிழி’. அதேபோல், ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’ ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் வித்தியாசங்களையும் குணச்சித்திரங்களையும் கொடுத்து, ஈர்த்து வியக்கவைத்துக் கொண்டே இருந்தார். முதல் படம் ’நீர்க்குமிழி’ பண்ணுகிற காலகட்டத்தில், எம்.எஸ்.வி.யும் கே.வி.மகாதேவனும் ராஜாங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், தன் முதல் படத்தில், தன்னுடைய நாடகத்தில் இசையமைத்து வந்த வி.குமாரை அறிமுகம் செய்தார்.

தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க, நாகேஷ் வரிசையில் அடுத்து அவர் தேர்வு செய்தவர் மேஜர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜனுக்கு முன்னே ‘மேஜர்’ எனும் அடைமொழிக்குக் காரணமே பாலசந்தர்தான். ‘மேஜர் சந்திரகாந்த்’ படமும் பாத்திர வார்ப்புகளும் ’புது தினுசு’ என்று இன்றைக்கும் திரையுலகமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இதேபோல, ஜெமினி கணேசனை பலவிதமாகப் பயன்படுத்தினார் பாலசந்தர். ‘வெள்ளி விழா’, ‘புன்னகை’, ’பூவா தலையா’, ‘தாமரை நெஞ்சம்’, ‘நான் அவனில்லை’, ‘காவியத்தலைவி’, என எத்தனையோ படங்கள்! செளகார் ஜானகி, வாணிஸ்ரீ, ஜெயந்தி, ராஜஸ்ரீ, சரோஜாதேவி என பலருக்கும் இன்று வரை சொல்லும்படியான கேரக்டர்களைக் கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால், ‘எதிர்நீச்சல்’ படத்தில் காமெடியில் கலக்கியெடுக்கும் மனோரமாவுக்கு சீரியஸ் ரோல். சீரியஸ் கதாபாத்திரங்களை அதிகம் பண்ணிக்கொண்டிருந்த செளகார் ஜானகிக்கு காமெடி கேரக்டர். நடிகர் ஸ்ரீகாந்தை, அவர் இயற்பெயரான ‘வெங்கி’ என்று அழைக்கும் மிகச் சிலரில் பாலசந்தரும் ஒருவர். ஸ்ரீகாந்தின் அறையில் இருந்தபடி, இவர் எழுதிக்குவித்த கதைகளெல்லாம் நமக்குத் திரையில் படங்களாக விரிந்து, இன்றைக்கும் சரித்திரப் பதிவுகளாக இருக்கின்றன.

’அனுபவி ராஜா அனுபவி’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’ என்று ஒரு பக்கம் காமெடிப் படமும் ‘நாணல்’ , ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘நூற்றுக்கு நூறு’ என த்ரில்லிங் படங்களும் குடும்பத்துக்குள் நிலவுகிற குழப்பங்களையும் நேர்மையும் வாய்மையும் கொண்ட வாழ்க்கையையும் பாலசந்தர் படங்களில் வெளிப்படுத்தியதே புது ரகம். ‘இப்படிக் கூட படம் பண்ணமுடியுமா?’ என்று ‘புன்னகை’ படத்தையும் அந்த ‘சத்யா’ கேரக்டரையும் இன்னமும் மறக்கவே இல்லை ரசிகர்கள்.

’அரங்கேற்றம்’ பிரமீளா, ’அபூர்வ ராகங்கள்’ ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நூல்வேலி’களில் சுஜாதா; ‘மூன்று முடிச்சு’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ஆகியவற்றில் ஸ்ரீதேவி; ‘மரோசரித்ரா’, ‘தப்புத்தாளங்கள்’, ‘நூல்வேலி’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அக்னி சாட்சி’ போன்றதில் சரிதா; ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என ஜெயசித்ரா மற்றும் ஸ்ரீவித்யா; ‘நூற்றுக்கு நூறு’ லட்சுமி, ஸ்ரீவித்யா மற்றும் விஜயலலிதா, ‘எதிர்நீச்சல்’ ஜெயந்தி.. என இன்னும் எத்தனையோ படங்களில் பெண் கதாபாத்திரங்கள் உயர்ந்து நின்றன; ஒளிர்ந்து ஜொலித்தன.

பாலசந்தரின் படங்களில் அவர் உருவாக்கியிருக்கிற பெண் கதாபாத்திரங்களை ஆய்வுக்கே எடுத்துக் கொள்ளலாம். தமிழ்த் திரையுலகில், பெண்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தியது அநேகமாக பாலசந்தராகத்தான் இருக்கும். படமும் கதையும் கதாபாத்திரங்களும் ஒரு நாவலைப் போல் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

கதை சொல்லவேண்டியதை, காட்சிகள் சொல்ல வேண்டும். காட்சிகள் உணர்த்த வேண்டியதை வசனம் சொல்ல வேண்டும். வசனம் சொல்லவேண்டியதை ஒரு பாடலே சொல்லிவிட வேண்டும். சில சமயங்களில், மெளனம் மற்றும் இசையைக் கொண்டும் உணர்வுகளைச் சொல்லி விடுவார் பாலசந்தர். ஒரு காட்சியை ஆரம்பிக்கும்போதும், முடிக்கும் போதும், நடுவேயும் நகாசு பண்ணிக் கொண்டே இருப்பார். அதுதான் பாலசந்தர் ஸ்டைல்.

எத்தனையெத்தனை நடிகர்களுக்கோ முகமும், புதிய முகவரியும் கொடுத்தவர் பாலசந்தர். நாகேஷை வைத்து 36 படங்களுக்கும் மேல் இயக்கினார். கமலை வைத்து 30 படங்களுக்கு மேல் இயக்கினார். ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ஜெயந்தி, சரிதா, கீதா, ஜெயப்ரதா, சுமித்ரா, ஷோபா என நடிகைகளின் நடிப்பை வெளிப்படுத்தி, கதாபாத்திரங்களாகவே வார்த்தெடுத்து, பலம் கொண்ட கேரக்டர்களை வழங்கினார்.

Ramji

தமிழ் சினிமாவில் அதிக அளவில் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்ததும் பாலசந்தர்தான். 65-க்கும் மேற்பட்டவர்களை அறிமுகப்படுத்தி, இதில் முக்கால்வாசி நபர்களை நம் மனதில் நிற்கவைத்தும், சாதித்துக்காட்டிய யதார்த்த சினிமாக்களின் சிகரம் பாலசந்தர்.

தன்னைச் சுற்றியுள்ள கலைஞர்களை அற்புதமாகப் பயன்படுத்துவார். எம்.எஸ்.வி.யின் மிகச்சிறந்த இசையை தன் படங்களுக்குள் இணைத்திருக்கிறார். ‘’எத்தனையோ இயக்குநர்களின் படங்களுக்கு பாட்டு எழுதியிருக்கிறேன். பாலசந்தருக்கு பாட்டு எழுதுவதுதான் எனக்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஒரு பாட்டுக்குள் படத்தின் ஜீவன் மொத்தத்தையும் சொல்லச் சொல்லுவார் பாலசந்தர்’’ என்று கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. பாலசந்தர் படங்களும் தனி ரகம்; அவர் படத்தின் இசையும் பாடல்களும் புது தினுசு!

’தெய்வம் தந்த வீடு’, ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ , ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ . ‘கேள்வியின் நாயகனே’, ‘காதோடுதான் நான் பேசுவேன்’, ’நானா பாடுவது நானா’, ’மூத்தவள் நீ கொடுத்தாய்’, ’கம்பன் ஏமாந்தான்’, ‘உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’, ‘முத்துக்குளிக்க வாரீகளா’, ‘அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’, ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’, ‘இலக்கணம் மாறுமோ’, ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’, ‘ஓடுகிற தண்ணியில’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’, ‘ஆண்டவனின் தோட்டத்திலே’, ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ , ‘பூமாலை வாங்கி வந்தால்’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’, ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’.. என்று இன்னும் இன்னுமாகச் சொல்லிக் கொண்டே போக பாடல்கள் வரிசைகட்டி நிற்கின்றன. நூறு படங்களை இயக்கியவரின் படங்களும் நீளம். பாடல்களும் தாராளம்.

‘ஆடி வெள்ளி தேடி உன்னை’ பாடல் இன்றைக்கும் இதம். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் இந்திப் பாடலைத் தந்திருப்பார். ‘அழகன்’ படத்தில் இரவு முடிந்து விடியும் வரைக்கும் பாடுகிற பாடலும், ரேடியோவில் பாடுவது போல் பாவனை செய்து பாடுகிற ‘மேஜர் சந்திரகாந்த்’ பாடலும்.. என காட்சிகளில் கவிதை பண்ணுகிற வித்தை அனைத்தும் பாலசந்தரின் புதுமைகள்!

’அவர்கள்’ பொம்மை, ’அவர்கள்’ அனு, ’அவர்கள்’ ராமனாதன், ’அவள் ஒரு தொடர்கதை’ விகடகவி கோபால், ’அபூர்வ ராகங்கள்’ பிரசன்னா, ’அபூர்வ ராகங்கள்’ எம்.ஆர்.பி., ’சிந்துபைரவி’ ஜே.கே.பி. ’மனதில் உறுதி வேண்டும்’ நந்தினி, ’எதிர்நீச்சல்’ மாடிப்படி மாது, ’வறுமையின் நிறம் சிகப்பு’ திலீப், ’நினைத்தாலே இனிக்கும்’ சந்துரு.. என ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் உயிர் கொடுத்திருப்பார் பாலசந்தர்.

’அச்சமில்லை அச்சமில்லை’யில் அருவி, ’மரோசரித்ரா’ முதலான படங்களில் விசாகப்பட்டினம் கடற்கரை, ‘அழகன்’ டெலிபோன், இளையராஜா அறிமுகமாகி பரபரப்பு கிளப்பிய வேளையில் எம்.எஸ்.வி.யுடன் கைகோர்த்துக் கொடுத்த தேனிசை மழையான ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘உன்னால் முடியும் தம்பி’யின் தோட்டக்கார தாத்தா, ‘எதிர்நீச்சல்’ இருமல் தாத்தா, ‘புதுப்புது அர்த்தங்கள்’ பூர்ணம் விஸ்வநாதன் - செளகார் ஜானகி ஜோடி என பாலசந்தர் செய்த மாயாஜாலங்கள்; கலர்ப் படங்கள் ஜாலம் காட்டியவேளையிலும் கறுப்புவெள்ளையில் சிற்பியைப் போல் செதுக்கி செதுக்கி உருவாக்கினார் பாலசந்தர்!

‘அரங்கேற்றம்’ டால்டா டப்பாவுடன் திரியும் மனப்பிறழ்வுப் பெண், ‘மூன்று முடிச்சு’ மனசாட்சி, ‘எதிர்நீச்சல்’ இருமல் தாத்தா என்று இவர் கேரக்டர்கள் நம்மை ஏதோ செய்யும். இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம் எல்லாம் இருக்கும். ஆனால் பலசந்தர் படங்களில் ஹீரோவின் பெயரே மறந்து, கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் காட்சி, பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி.. என நிறைக்க நிறைக்கத் தந்திருப்பார்.

’பூவா தலையா’ படம். அத்தைக்கு கட்டுப்படும் மருமகன். தலையாட்டி பொம்மை ஆடுவதையும் பீரோவில் தொங்கும் சாவிக்கொத்து அசைவதையும் காட்டியிருப்பார். ’அவள் ஒரு தொடர்கதை’ ஃபடாபட் எனும் சொல், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்.. அவள் ஒரு தொடர்கதை வில்லனின் கை மடக்கி விரிக்கும் ஸ்டைல் என பாலசந்தரின் ரகளையையும், ரசனைகளையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

அழுகாச்சி கேரக்டராகவே செளகார் ஜானகிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா என்று எதிர்நீச்சலிலும் தில்லுமுல்லுவிலும் வாய்ப்பை வழங்க, அதைக்கொண்டு அதகளம் பண்ணியிருப்பார் செளகார் ஜானகி. தேங்காய் சீனிவாசனுக்கு ‘தில்லுமுல்லு’ ஒன்று போதும்.. இன்னும் நூறாண்டு கழித்தும் அவரின் கேரக்டரைப் பேசிக்கொண்டே இருப்போம்; ரசித்துச் சிரித்துக் கொண்டே இருப்போம்!

அவள் ஒரு தொடர்கதையில், ‘பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’ என்று விஜயகுமாரின் அம்மா கேரக்டர் சொல்ல, ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று சொல்லுவார் சுஜாதா. ’நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதா, தலையை ஆட்டி ஆமாம் சொல்லிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிவிட்டு, இல்லை என்று சைகையில் சொல்வதை.. செய்யாத, செய்து பார்க்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.

வி.குமார், எம்.எஸ்.வி., விஜயபாஸ்கர், இளையராஜா, வி.நரசிம்மன், மரகதமணி, ஏ.ஆர்.ரஹ்மான் என்று இசையிலும் கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று பாடல்களிலும் அப்டேட்டாகிக் கொண்டே இருந்தார். ஒரு பக்கம் அனந்துவும் இன்னொரு பக்கம் ரகுநாத ரெட்டியும் பக்கத்துணை நின்றார்கள்.

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்; சினிமாவில் பரபரவென இருக்கும் போதே ‘மின்பிம்பங்கள்’ உருவாக்கி, தொலைக்காட்சி சீரியல்களுக்குள் இறங்கினார். ஒரு சீரியல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவரின் சீரியல்கள் பலவும் ஆகச்சிறந்த உதாரணங்கள்! பாலசந்தரின் கான்செப்ட்டை நூல் பிடித்து சீரியல்கள் செய்தால், இன்றைய பெண்களுக்கு நல்ல நல்ல படைப்புகளும் கருத்துகளும் கிடைக்கும்!

கே.பாலசந்தர் என்றும் கே.பி.என்றும் அழைக்கப்படுகிற இயக்குநர் சிகரம்.. இயக்குநர்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழ்ந்து, இன்றைக்கும் ரசிக மனங்களில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.

1930-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பிறந்த கே.பாலசந்தர் 2014-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி காலமானார். கே.பாலசந்தர் நினைவு நாளில் (டிசம்பர் 23ம் தேதி), சிகரத்தைப் போற்றுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in