
போலீஸிடம் பொய் புகார் கூறிய பிரபல ஹாலிவுட் நடிகர் ஜுஸி ஸ்மோலெட்டுக்கு 150 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
’த ஸ்கின்னி’, ’ஆஸ்க் மி எனிதிங்’, ’மார்ஷல்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஜுஸி ஸ்மோலெட் (Jussie Smollett). ’எம்பயர்’ உட்பட ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு, போலீஸில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.
அதில், தான் இரவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, டிரம்ப் ஆதரவாளர்களான இரண்டு பேர் தன் மீது ரசாயனப் பொருட்களை வீசி, கழுத்தில் கயிற்றைக் கட்டியதாகவும் இனவெறியுடன் தன்னைத் தாக்கித் திட்டியதாகவும் அவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும் கூறியிருந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், இது போலியான புகார் என்றும் அனுதாபம் தேடுவதற்காக, நைஜீரியாவை சேர்ந்த 2 பேரிடம் பணம் கொடுத்து அவரே அப்படி செய்ய சொன்னதும் தெரியவந்தது. தன் மீது அனுதாபம் எழவும் விளம்பரத்துக்காகவும் அவர் இப்படி செய்ததாகப் போலீஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பான வழக்கு சிகாகோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இனவெறுப்புக் குற்றம் சுமத்திய நடிகர் ஜுஸி ஸ்மோலெட்டுக்கு 150 நாட்கள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், 25 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்துள்ளது.