
ஜெயம் ரவி, நயன்தாரா மீண்டும் நடிக்கும் சைக்காலஜி த்ரில்லர் படத்தை அகமது இயக்குகிறார்.
நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து அவர் நடிக்கும் ‘அகிலன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கு முன்பு, ’ஜனகனமன’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதை அகமது இயக்கினார்.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்திருந்தன. மற்றக் காட்சிகள் வெளிநாட்டில்தான் படமாக்க வேண்டும் என்ற நிலையில், கரோனா காரணமாக அதைத் தொடர முடியவில்லை. அதனால், அந்தப் படம் பாதியில் நிற்கிறது.
இதற்கிடையே, அதே நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தை அகமது இயக்குகிறார். இதில், ஜெயம் ரவி ஹீரோ. நயன்தாரா நாயகி ’தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு இதில் ஜெயம் ரவியும் நயன் தாராவும் இணைகிறார்கள். இந்தப் படம் பற்றி இயக்குநர் அகமது கூறும்போது, “இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். அழகான காதல் கதையும் இருக்கிறது. நயன்தாரா- ஜெயம் ரவி ஜோடி ஏற்கெனவே ’தனி ஒருவன்’ படத்தில் இணைந்திருக்கிறது. அதில் அவர்கள் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. இதற்கு முன் அவர் நடித்திராத கேரக்டர்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.