
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை ‘ ஜெயிலர்’ படம் ரிலீஸாகவுள்ள நிலையில், கட்அவுட்டிற்காக பால் பாக்கெட்கள் திருடப்படும் என்பதால் விநியோகஸ்தர்கள் கவனமாக இருக்க வேண்டுமென பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர்கள் ரஜினி,கமல், விஜய், அஜீத் என முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அவர்களது கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்காக கடைகளில் அதிகாலையில் வைக்கப்படும் பால் பாக்கெட்கள் திருடப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படம் நாளை வெளியாவதை முன்னிட்டு பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘’பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது பால் பாக்கெட்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தாலும் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையில் சமூக விரோதிகள் பால் பாக்கெட்டுகளைத் திருடக் கூடும் என்பதால் விநியோகஸ்தர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.