'ஜெயிலர்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், திரைப்படம் சுமார் தான் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
இத்திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து, ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு சொகுசு கார்களை, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்தார். மேலும், படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயமும், சன் குழும ஊழியர்களுக்கு வெள்ளி நாணயமும் பரிசளிக்கப்பட்டது
இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், படத்தில் நடித்திருந்த ரஜினி, தமன்னா, சுனில், அனிருத், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், 'ஜெயிலர்' திரைப்படம் ஆவரேஜ் தான். அனிருத்தின் இசையே படத்தை தூக்கி நிறுத்தி ஹிட் ஆக்கியுள்ளது என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'ஜெயிலர்' திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி விழா கொண்டாடும் நேரத்தில், ரஜினி இவ்வாறு பேசியது இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு கடும் வேதனையை ஏற்படுத்தும் என்றும், அவர் ஒரு தலைபட்சமாக பேசுவதாகவும் நெட்டிசன்கள் ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.