
வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால் மற்றவர்களைச் சிரிக்க வைப்பது தான். ஆனால், கண்ணீர் விட வைப்பது எளிது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
சென்னையில் 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் மோகன் ராஜா இதனை வெளியிட்டார். ‘லாக்கப்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்துள்ளார். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.
டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ”கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். ‘கனா’ படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, ‘க /பெ ரணசிங்கம்’ படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, ‘சொப்பன சுந்தரி’ படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம்.
நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குநர் தான் நடிகர் நடிகைகளைப் பிரம்மாண்டமாகவும். பிரமிப்பாகவும் காடசிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.
நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால், இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால் மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இது சரியாக செய்து விட்டால் அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன்" என்றார்.