`சிறந்த இயக்குநர், அந்த எனர்ஜி, விலைமதிப்பற்ற நினைவு’: தமன்னா மகிழ்ச்சி!

`சிறந்த இயக்குநர், அந்த எனர்ஜி, விலைமதிப்பற்ற நினைவு’: தமன்னா மகிழ்ச்சி!

``இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரின் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி'' என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் படம், ’பப்ளி பவுன்சர்’. தமிழுக்கு பெயர் மாற்றப்பட இருக்கிறது. பாலிவுட்டில் தயாராகும் இந்தப் படத்தில், பவுன்சராக நடிக்கிறார் தமன்னா. மதுர் பண்டார்கர் இயக்குகிறார். வட இந்தியாவின் பவுன்சர் நகரம் என்றழைக்கப்படும் அசோலா ஃபதேபூரை மையமாகக் கொண்ட இந்தப் படம், ஒரு பெண் பவுன்சரை பற்றிய கதையை கொண்டது.

நடிகை தமன்னா, பெண் பவுன்சராக நடிக்கிறார். சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் வய்த் உட்பட பலர் நடிக்கின்றனர். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்கிளி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதைத் தெரிவித்துள்ள இயக்குநர் மதுர் பண்டார்கர், ’அருமையான நினைவுகள், அழகான நட்புணர்வு, அற்புதமான டீம் வொர்க், ஜாலியான நாட்கள். அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட படத்தின் இறுதிவரை பயணித்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மதுர் பண்டார்கருடன் நடிகை தமன்னா.
இயக்குநர் மதுர் பண்டார்கருடன் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா கூறும்போது, ``இந்தப் படம் எனக்கு பெரும் அனுபவம். இதன் படப்பிடிப்பில், சிறந்த, நேர்மறையான, ஆதரவானவர்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தோம். அந்த எனர்ஜி, என் உணர்ச்சிகளை திரையில் வெளிப்படுத்த உதவியது. இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மதுர் பண்டார்கர். அவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. படப்பிடிப்பின்போதும் மற்ற நேரங்களிலும் அன்பாக நடந்துகொள்ளும் நபர் அவர். அவருடைய மகிழ்ச்சியான, நிதானமான செயல்பாடுகளால் எங்களால் சிறப்பாக நடிக்க முடிந்தது. கடைசி ஷெட்யூல் முடிந்ததும், விலைமதிப்பற்ற நினைவுகளையும் படப்பிடிப்பில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் என்னோடு எடுத்து வந்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in