சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படம் கைவிடப்பட்டதா என்ற செய்திக்கு படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.
’பிரின்ஸ்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் அதிதி பத்திரிகையாளராகவும் நடிகர் சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட்டாகவும் நடிக்கிறார்கள். இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது என செய்திகள் வெளியான நிலையில் படக்குழு இது குறித்து விளக்கமளித்துள்ளது.
படக்குழு இது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருப்பதாவது, ’சமூக வலைதள இன்ஃபுளூயன்சர்கள், ஊடகங்கள் போன்றவை வரக்கூடிய செய்தியை சரி பார்க்காமல் எப்படி படம் கைவிடப்பட்டது என்று செய்திகள் வெளியிடலாம்? இந்த படத்தில் நிறைய இளம் திறமைகளும் நிறைய பணமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனும் போது அந்த பொறுப்பை உணர்ந்து செய்திகளை படக்குழுவுடனோ அல்லது மக்கள் தொடர்பாளர்களுடனோ உறுதிப்படுத்திக் கொண்டு பின்பு வெளியிடுங்கள்’ என தெரிவித்து ’மாவீரன்’ படம் கைவிடப்பட்டது என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.