ஷங்கர் இயக்கும் படத்தில், நடிகை அஞ்சலி நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கும் படத்தில் ராம்சரண் நாயகனாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகிறது. இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.
அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு புணே அருகே பிரம்மாண்ட அரங்கம் அமைத்து நடைபெற்றது. அதில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 2-ம் கட்டப் படப்பிடிப்பு, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது. அங்கு முதல்நாள் நடந்த படப்பிடிப்பில் ரசிகர்கள் கூடியதால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை அஞ்சலி இதன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.