அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்தியா படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்காக அவருக்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மகனான இவர் நடித்து சமீபத்தில் வெளியான படம், ’புஷ்பா’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். பகத் பாசில், சுனில், ஜெகதீஷ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கைப் போலவே இந்தியிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் இந்த வருடம் வர இருக்கிறது. இந்த வியாபாரம் முதல் பாகத்தைவிட அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தைத் தமிழில் வெளியிட்ட லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னணி இயக்குநர் இயக்கும் இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தென்னிந்தியத் திரையுலகில் ரூ. 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களாக, ரஜினிகாந்த், விஜய், பிரபாஸ் மட்டுமே இருக்கிறார்கள். அந்த இடத்துக்கு ’புஷ்பா’ என்ற ஒரே படத்தின் மூலம் வந்திருக்கிறார், அல்லு அர்ஜுன்.