ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஷங்கர் இயக்கும் படத்தில், ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, RC15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் புணே அருகே நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்புகள், ராஜமுந்திரி, காக்கிநாடா, மேற்கு கோதாவரி, அமிர்தசரஸில் நடந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது.
இந்நிலையில் இந்தப் படத்துக்காக, விஸ்வம்பரா, சர்க்கார்டு, ஆபிஸர், அதிகாரி உட்பட பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் ’அதிகாரி’ என்ற தலைப்பை படக்குழு உறுதி செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த தலைப்பையே வைக்கலாம் என்று ராம்சரணும் உறுதியாகத் தெரிவித்துள்ளாராம்.
பான் இந்தியா படம் என்பதால், அனைத்து மொழிக்கும் பொருந்துவதாக இந்த தலைப்பு இருப்பதால், இதை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் படத்தின் தலைப்பை அறிவிப்பார் என்கிறார்கள்.