கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிரஞ்சீவிக்கு இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட்டது.
கோவாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து சர்வதேச திரைப்பட விழாவை நடத்தியது. கடந்த 20-ம் தேதி இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் முதல் முறையாக திரைப்படங்களுடன் சர்வதேச அளவில் வெளியாகி வெற்றி பெற்ற ஓடிடி படங்கள் மற்றும் தொடர்களும் ஒளிபரப்பப்பட்டன.
மேலும் இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. அதற்கு அவர் தனது தாய் மொழியில் நன்றி தெரிவித்தார். இவ்விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.