தென்னிந்திய சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது கதைத் தேர்வில் சில தவறுகளைச் செய்தேன் என்று நடிகை டாப்ஸி கூறினார்.
‘ஆடுகளம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி, பிறகு தெலுங்குக்குச் சென்றார். இப்போது இந்திப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் நடித்துள்ள, ‘லூப் லபேடா’ (Looop Lapeta) என்ற இந்திப் படம் நெட்ஃப்ளிக்ஸில் பிப்ரவரி 4 -ம் தேதி வெளியாகிறது. இது ஜெர்மன் மொழியில் வெளியான கிளாஸிக் படமான, ’ரன் லோலா ரன்’ படத்தின் ரீமேக். ஆகாஷ் பாட்டியா இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாப்ஸியுடன் தஹிர் ராஜ் பாசின், ஷ்ரேயா தன்வர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் பற்றி பேசிய நடிகை டாப்ஸி கூறியதாவது:
நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் வெகுஜன திரைப்படங்கள்தான் மக்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்து அதுபோன்ற படங்களில் அதிகம் நடித்தேன். அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது நான் சில தவறுகளைச் செய்தேன். பிறகுதான், என்ன மாதிரியான திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதுபோன்ற படங்களில் நடிக்க முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு சாதகமாகவே அமைந்தது.
இருந்தாலும் ஒரு ரசிகையின் மனநிலையில் இருந்து மாறவில்லை. ஒரு படத்தின் கதையைக் கேட்கும்போது நடிகையாகக் கேட்பதில்லை. பார்வையாளராகவே என்னை நினைத்துக்கொண்டு கேட்கிறேன். முடிவு செய்கிறேன்.
இந்தி திரையுலகில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் தென்னிந்திய சினிமாவை விட்டுவிடவில்லை. அவர்கள் மொழி தெரியாதபோதே அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்கள் மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். பிறகு ஏன் அந்த மொழிப் படங்களில் இருந்து வெளியேற வேண்டும்? அதனால் வருடத்துக்கு ஒரு படம் அங்கு நடிக்கிறேன்.
இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.