`பெரியார்' படத்தில் வாழ்ந்திருக்கிறேன்; மற்ற படங்களில் நடித்திருக்கிறேன்'

`ராதே ஷியாம்' பட நிகழ்ச்சியில் சத்யராஜ் பேச்சு
`பெரியார்' படத்தில் வாழ்ந்திருக்கிறேன்; மற்ற படங்களில் நடித்திருக்கிறேன்'

`பெரியார்' படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்" என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ராதே ஷியாம். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம். பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், "பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், பூஜா டார்லிங்கின் டார்லிங், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள். பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும். நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது.

இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள். ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்நேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி" என்று கூறினார்.

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி பேசுகையில், "ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண எப் ஐ ஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை, என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன் அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. பிரபாஸ் உடைய ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும்.

பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார், இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். பார்த்து ரசியுங்கள் நன்றி'' என்று கூறினார்.

நடிகர் சிபி சத்யராஜ் பேசுகையில், "எனக்கு கைரேகை பார்க்க தெரியாது. ஆனால் போஸ்டர் பார்த்தாலே பிரமாண்ட ஹிட்டாகும் என தெரிகிறது. பிரபாஸின் தீவிர ஃபேன் நான். உங்களை பற்றி அப்பா நிறைய சொல்லியிருக்கிறார். இப்போது அதிகம் புழங்கும் பான் இந்தியா என்ற அடைமொழி பாகுபலியில்தான் ஆரம்பித்தது. பாகுபலிக்கு பிறகு நீங்கள் செய்யும் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கிறது. படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.

இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் கூறுகையில், "பிரபாஸ் உண்மையில் வெரி க்யூட் பாய், அவர் ரொமான்ஸான ஆள் அவரிடம் பழகியபோது இப்படத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார் என தோன்றியது. சத்யராஜிடம் இந்த கதையை சொன்ன போது என்னைப்பற்றி உங்களுக்கு தெரியுமா எனக்கேட்டார். அவரது நம்பிக்கைகள் பற்றி தெரிந்து கொண்டேன். ஆனால் எனக்காக ஒத்துக்கொண்டு நடித்துள்ளார். உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in