எனது ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்து விட்டேன். ஆனால், நான் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.
'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. 'அடங்கமறு', 'சங்கத்தமிழன்', 'துக்ளக் தர்பார்', 'அரண்மனை 3', 'திருச்சிற்றம்பலம்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் தனது ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். அத்துடன் இனி இன்ஸ்டாகிராமில் மட்டும் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறுகையில்," வணக்கம் நண்பர்களே, எனது ட்விட்டர் கணக்கைச் செயலிழக்கச் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். நன்றி" என்று தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடமிருந்து ஆன்லைனில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டதால் இந்த நடவடிக்கையை நடிகை ராஷி கண்ணா எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் நடிகர் கார்த்தியுடன் 'சர்தார்' படத்தில் நடிக்கிறார்.