’சலார்’ படத்தில், தனது கேரக்டர் சுவாரஸ்யமானது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு நேற்று பிறந்தநாள். இதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை குவித்தனர். தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர் பூஜா தல்வாருக்கு அவர் அளித்த வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:
“இப்போது ’சலார்’ படத்தில் நடித்து வருகிறேன். பான் இந்தியா படமாக உருவாகும் இதன் கதை, பிரமாதமானது. இதில் என் கேரக்டர் என்ன என்று கேட்கிறார்கள். அது சுவாரஸ்யமான கேரக்டர் என்பதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும். மற்ற எதையும் இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை. இயக்குநர் பிரசாந்த் நீல் திறமையானவர். அவருடைய பார்வை வித்தியாசமாக இருக்கிறது. அவர் என்ன விரும்புகிறார் என்பதை படக்குழு புரிந்து கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் நான் ஆக்ஷன் காட்சிகள் எதிலும் நடிக்கவில்லை. பல திரைப்படங்களின் செட்களில் இருந்திருக்கிறேன் என்றாலும் ’சலார்’ படப்பிடிப்பின்போது கிடைத்த உணர்வு வித்தியாசமானது. படத்தின் ஹீரோ பிரபாஸ், அருமையான மனிதர். சரியான சாப்பாட்டுப் பிரியர். உணவின் மீதான அவரின் ஆர்வம் உண்மையானது. அவர் அனைவருக்கும் உணவளிக்க விரும்புகிறார். அதன்மூலம் அன்பைப் பரப்ப நினைக்கிறார்” இவ்வாறு ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.