வெளிநாட்டில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் இருந்த நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. தமிழ், தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அப்போது படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தகவல் வெளியா து. இதைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக படப்பிடிப்பு தளத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'பிச்சைக்காரன் 2' படத்தை தனது விஜய் ஆண்டனி புரொடக்ஷன் மூலம் தயாரிப்பதோடு, இசையமைப்பாளராக மட்டுமின்றி முதல் முறையாக இப்படத்தில் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விபத்தில் விஜய் ஆண்டனியின் பற்கள் விழுந்துவிட்டதாகவும், முகம் கடும் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் விரைவில் மீண்டு வாருங்கள் என விஜய் ஆண்டனியைப் மையப்படுத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் விஜய் ஆண்டனியை வைத்து பான் இந்தியா படமாக இயக்கத்திட்டமிட்டிருக்கும் இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிச்சைக்காரன் 2 படப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சார், இருநாள்களுக்கு முன்னாடியே அவர் வீட்டுக்கு வந்துட்டாரு. இருவாரங்கள் மருத்துவர் பரிபூரண ஓய்வெடுக்கச் சொல்லியுள்ளார். அவர் கூடிய விரைவில் தன் ரசிகர்களிடம் வீடியோ மூலம் பேசுவார். ரசிகர்கள் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி சார் பற்றிய தவறானத் தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.