பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? விஷாலிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொடர் விசாரணையை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விஷால் தரப்பில் வங்கி விவரங்களும், சொத்து விவரங்களும் அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

பின்பு நீதிபதி முன்னான விசாரணையில் நடிகர் விஷாலிடம், ‘பணத்தைத் திரும்ப செலுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? நடிப்பதன் மூலம் பணம் பெறுகிறீர்கள். ஆனால், கடனை திரும்ப செலுத்த மாட்டீர்களா? இனிமேல் உங்கள் படங்களுக்கு தடை விதிக்கலாமா?’ என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

இந்த நிலையில், இன்றைய விசாரணையில் லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கடந்த 2021ம் ஆண்டில் இருந்து விஷால் தாக்கல் செய்த கணக்குபடி ரூ. 80 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இவ்வளவு பணம் இருந்தும் வேண்டுமென்றே எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விஷால் செலுத்தவில்லை’ எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதுமட்டுமல்லாது, தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதி தொகையாவது டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதுதொடர்பான மெமோ ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

மெமோவிற்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என விஷால் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தபோது குறுக்கிட்ட நீதிபதி, ‘பணத்தை இன்னும் ஏன் செலுத்தவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால் தரப்பு வழக்கறிஞர், ‘நாங்கள் பணத்தை செலுத்த தயாராகவே உள்ளோம். ஆனால், லைகா தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை’ எனக் கூறினார். இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in