விசாரணை அதிகாரியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப், குற்றப்பிரிவு போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராக கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது.
இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொல்ல, நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். இதையடுத்து திலீப், அவரது சகோதரர் அனூப், திலீப்பின் மைத்துனர் டி.என்.சூரஜ், உறவினர் அப்பு, நண்பர் பைஜூ செம்மங்காடு, ஓட்டல் உரிமையாளர் சரத் ஆகிய 6 பேர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மூன்று முறை ஒத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்திருந்தது.
அதன்படி இன்று விசாரித்த நீதிமன்றம், திலீப் உட்பட 6 பேரும் இந்த வழக்கில், குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு 2 நாள் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அதனடிப்படையில் 2 நாட்களுக்குப் பின் முன்ஜாமீன் மனு பரிசீலிக்கப்படும் என்றும் 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து, நாளையும் நாளை மறுநாளும் கேரள குற்றப்பிரிவு போலீஸார் திலீப்பிடம் விசாரணை நடத்த உள்ளனர்.