தமிழ் திரைப்படங்களின் பிரம்மாண்டம் நாயகர்களின் பிம்பத்திற்குள் சுருங்கிவிட்டதா?

தமிழ் திரைப்படங்களின் பிரம்மாண்டம் நாயகர்களின் பிம்பத்திற்குள் சுருங்கிவிட்டதா?

சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாடியன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அருண்பாடியன் தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்து வருவது போல் தோன்றுகிறது. நடிகர்களுக்கு படம் தயாரிக்க ஆகும் செலவில் 90 சதவீதம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது.

கன்னட திரைப்படங்களான பாகுபலி, கேஜிஎஃப் போல் தமிழில் படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது போல் அருண்பாடியனின் பேச்சு அமைந்திருந்தது. இதற்கு அதே மேடையில் மறுப்பு தெரிவித்த இயக்குனர் அமீர், ஒரு ஆர்ஆர்ரையோ, கேஜிஎஃப்யையோ வைத்து தமிழ் படங்களை எடைப் போடக்கூடாது. தமிழ் திரைப்படங்கள் எந்த வகையில் பின்னதங்கவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான சந்திரலேகா, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை உதாரணமாகவும் குறிப்பிட்டும் பேசினார். இவர்கள் இவருவரின் பேச்சும் கவனிக்கதக்கது. அதேவேளையில் இயக்குனர் அமீர் கூறியது போல் ஓரிரு திரைப்படங்களை வைத்து தமிழ் திரைப்படங்களை பிற மொழிப் படங்களுடன் எடைப் போடக்கூடாது.

எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்திலேயே தமிழில் பிரம்மாண்ட வரலாற்றுக் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் ஏராளமாக வெளிவந்தன. அவை பிற மொழி திரைப்படங்களுக்கு முன் உதாரணமாகவும் விளங்கியது. சொல்லப் போனால் வரலாற்று தரவுகளை கதைக்களமாக கொண்டு தமிழில் தான் அதிக திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான பார்த்திபன் கனவு, சந்திரலேகா, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், உத்தம புத்திரன் போன்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

இவற்றில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் கணிசமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதுபோல் அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற மாயாஜால படங்களும் தொழில்நுட்ப வசதியில்லாத கால கட்டத்திலே வரிசை கட்டி வரத் தொடங்கியது. இதுபோன்ற திரைப்படங்கள் பிற மொழிகளில் பின்னாளில் வந்தாலும் தமிழ் திரைப்படங்களே அவற்றுக்கு அடிநாதமாக விளங்கியது என்றால் அதை மறுப்பதற்கில்லை.

அதேவேளையில் காலப்போக்கில் வரலாற்று கதைகளை மையமாகக் கொண்டு தமிழில் திரைப்படங்கள் உருவாக்குவது குறையத் தொடங்கியது என்பதையும் மறுப்பதிற்கில்லை. இதை மையப்படுத்தி தான் நடிகர் அருண்பாடியன் பேசியுள்ளார். தரமான மற்றும் வித்தியாசமான கதைகளை தாங்கி தமிழ் திரைப்படங்கள் வந்தாலும் பிரமாண்டம் என்பது ரஜினி, விஜய், அஜித் மற்றும் தனுஷ் போன்ற முன்னனி நாயகர்களை வைத்து திரைப்படம் எடுப்பதே என்ற அளவில் சுருங்கிவிட்டது.

கதைகளுக்காக நாயகர்களை தேர்வு செய்வது மாறி, நாயகர்களுக்காக கதை தயார் செய்யும் போக்கே இதற்கு காரணம். சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்த யாஷ் கன்னட திரையில் முன்னனி நட்சத்திரம் கிடையாது. ஆனால் கதைக்கு யாஷ் பொருத்தமாக இருப்பார் என அவரை அத்திரைப்படத்தின் இயக்குனர் தேர்வு செய்தது பொய்யாகவில்லை.

கதையின் பிரம்மாண்டம் யாஷை இந்திய அளவில் உச்ச நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளது. இதுபோன்ற பிரம்மாண்ட வலுவான கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் மீண்டும் தமிழில் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அருண்பாடியனுக்கு மட்டுமில்லை திரை ரசிகர்களின் விருப்பமும் அது தான். அந்த வகையில் பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட தமிழ் திரைப்படங்கள் வருங்காலங்களில் வந்தால் அவற்றை வரவேற்கவும் தமிழ் திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in