தாய்லாந்தில் நடந்த பரத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கற்களை எறிந்து உள்ளூர்காரர்கள் தகராறில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தாய்லாந்தில் தாம் லுங் என்ற குகைக்குள் 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், பயிற்சியாளரும் கடந்த 2018-ம் ஆண்டு சிக்கிக்கொண்டனர். ஒன்பது நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது. பிறகு, ஆபத்தான நடவடிக்கை மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணி உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் ’ஆக்ஷன் 22’ என்ற படம் தயாராகிறது. சந்திரன் திக்கோடி தயாரிக்கும் இந்தப் படத்தில் தமிழ் நடிகர் பரத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சபரீஷ் வர்மா, இர்ஷத், லாலு அலெக்ஸ், கலேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். லிஞ்சு எஸ்தப்பன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பை சம்பவ இடத்திலேயே நடத்த படக்குழு தாய்லாந்து சென்றது.
குகை இருக்கும் பகுதியில் அரசு அனுமதியுடன் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தனர். இதற்காக விலையுயர்ந்த கார்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. அப்போது அங்கு வந்த உள்ளூர்க்காரர்கள் தங்களுக்குப் பணம் தந்தால்தான் படப்பிடிப்பை தொடர அனுமதிக்க முடியும் என்று தகராறில் ஈடுபட்டனர். விலையுயர்ந்த கார்களில் பெயின்டை சுரண்டியும் கற்களை எறிந்தும் தொல்லைக் கொடுத்தனர்.
பிறகு அவர்கள் கேட்ட பணம் கொடுக்கப்பட்டது. இருந்தும் மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் படக்குழு, போலீஸில் புகார் செய்தது. போலீஸார் சமாதானம் செய்த பிறகு படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தாய்லாந்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்துக்குப் பிறகு படப்பிடிப்பை ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். இதனால் படக்குழு இந்தியா திரும்புகிறது.