நடிகை ஜெனிலியா தனது உடல் எடையைக் குறைத்தது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் பதிவுகள் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
விஜய் நடித்த ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ஜெயம் ரவி நடித்த ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தவர் நடிகை ஜெனிலியா. தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த ஜெனிலியா, கடந்த 2012-ம் ஆண்டு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் நடிகருமனா ரித்தேஷ் தேஷ்முக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பின்னரும் படங்களில் நடித்துவரும் ஜெனிலியா சமீபத்தில் இந்தி, மராத்தி, தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது கணவருடன் இணைந்து உருவாக்கிய வேடிக்கையான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொள்வதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதில் தனது உடல் எடையைக் குறைத்தது குறித்தான அனுபவங்களை சுவாரசியத்துடன் பகிர்ந்திருக்கிறார் ஜெனிலியா. குறிப்பாக. ஆறு வாரங்களில் நான்கு கிலோ எடையைக் குறைத்த கதையையும். தனது உடற்பயிற்சி பயணத்தை பற்றி ஒரு நீண்ட ஊக்கமளிக்கும் குறிப்பையும் எழுதி உள்ளார்.
வீடியோவில் ஜெனிலியா தனது ஜிம் பயிற்சியாளருடன் கடுமையான பயிற்சி பெறுகிறார். அவருக்கு அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும், நடிகர் ஜான் ஆபிரஹாமும் உடற்பயிற்சியில் உதவுகிறார்கள்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் ஜெனிலியா, தனது பயணத்தை தொடங்கும்போது 59.4 கிலோவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 6 வாரங்கள் தீவிர உடற்பயிற்சி செய்த பின் இப்போது 55.1 கிலோவாக இருப்பதாகவும் கூறியுள்ள அவர், “நான் நிறைய சந்தேகங்களுடனும், நிறைய பாதுகாப்பின்மையுடன் தொடங்கினேன். ஆனால் இன்று இலக்கை எட்டுவதையெல்லாம் தாண்டி நான் மிகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன். சோர்வடையாமல் இருக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
உணவுக் கட்டுப்பாடு குறித்துப் பேசியிருக்கும் ஜெனிலியா, “என் உடல் எடையை அறிந்துகொண்டபோது குற்ற உணர்ச்சியால் உறைந்துபோனேன். உடல் தகுதியில் எடை மட்டுமே முக்கியம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முடிந்தவரை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கப் போகிறேன். விரைவில் சந்திப்போம்” என்றும் கூறியிருக்கிறார்.