ஐஸ்வர்யா ரஜினிகாந்தைத் தொடர்ந்து தனுஷூக்கும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தைத் தொடர்ந்து தனுஷூக்கும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷூக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

' நடிகர் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. எனவே படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷூக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்தது.

இந்நிலையில், அதே கோரிக்கைகளுடன் நடிகர் தனுஷூம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தனுஷின் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷூக்கு விலக்களித்து விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in