`புண்படுத்திவிட்டார்; மன்னிப்புக் கேட்கணும்’: சர்ச்சை நடிகை மீது வழக்கு பதிவு

`புண்படுத்திவிட்டார்; மன்னிப்புக் கேட்கணும்’: சர்ச்சை நடிகை மீது வழக்கு பதிவு

பழங்குடியினப் பெண்கள் போல ஆடை அணிந்து ஆபாசமாக நடந்துகொண்டதற்காக, சர்ச்சை நடிகை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பிரபலமானவர் இவர். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை இவர் ரகசிய திருமணம் செய்திருந்தார். இதை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். பின்னர் இருவரும் திடீரென பிரிந்தனர். அதையும் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழங்குடியின மக்களை போல ஆடை அணிந்தவாறு, அவர்களை கிண்டல் செய்வது போல பேசியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில கேந்த்ரிய சர்னா சமிதி என்ற அமைப்பு பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது ராஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் ட்ரிக்கி கூறும்போது, ``நடிகை ராக்கி சாவந்த், அரை நிர்வாண ஆடை அணிந்தபடி, பழங்குடியினப் பெண்களை இழிவுப்படுத்தியுள்ளார். ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிரான போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in