
பிரபல நடிகையும், அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா செல்வமணி தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணியால் செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் நடித்து வந்தாலும் ரோஜா அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரான ரோஜா, தற்போது அமைச்சராக உள்ளார். இதன் காரணமாக அவர் சினிமாவில் நடிப்பதில்லை.
இந்த நிலையில் ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா செல்வமணி தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தின் கதாநாயகனாக உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.