
பிரபல திரைப்பட இயக்குநா் ஷண்முகப்பிரியன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 71.
இயக்குநரும், கதை, வசனக்கர்த்தாவான ஷண்முகப்பிரியன் எழுத்தாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர். சிறுகதை, நாடகம், கவிதை, நாவல் என எழுத்துலகில் இருந்த அவர் பின்பு திரை இயக்குநராக மாறினார். அவர் எழுதிய 'விளிம்பு' என்ற நாடகம் 1976-ம் ஆண்டு 'உறவாடும் நெஞ்சம்' என்ற பெயரில் தேவராஜ்- மோகன் இயக்கத்தில் திரைப்படமானது. இந்தப் படத்தில் இளையராஜா இசையில் உருவான 'ஒருநாள் உன்னோடு ஒருநாள்' படம் மிகப்பெரிய ஹிட்டானது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்கான மாநில விருதைப் பெற்றார்.
ஷண்முகப்ரியன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கிய 'ஒருவர் வாழும் ஆலயம்' திரைப்படம் இசை ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரபு, ரகுமான், சிவகுமாா், அம்பிகா ஆகியோா் நடித்திருந்தனா். இதனைத் தொடர்ந்து ராமராஜன், ரேகா, குஷ்பு நடித்த 'பாட்டுக்கு நான் அடிமை', சத்யராஜ் நடித்த 'மதுரை வீரன் எங்க சாமி' ஆகிய படங்களை ஷண்முகப்பிரியன் இயக்கியுள்ளார். 'வெற்றிவிழா', 'பிரம்மா' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு ஷண்முகப்பிரியன் கதை, வசனம் எழுதியுள்ளார். அத்துடன் பல படங்களில் கதை விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஷண்முகப்பிரியன் நேற்று காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.