
ஆஸ்கர் விருது மேடையில் மொத்தம் 7 விருதுகளை தட்டித்தூக்கி இருக்கிறது ’எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறப்பாக நடைபெற்ற, 95வது அகடமி விருது வழங்கும் நிகழ்ச்சி, இந்தியர்களுக்கு மறக்க முடியாததாக அமைந்தது. இந்தியாவிலிருந்து பல்வேறு பிரிவுகளின் கீழ், ஒரு திரைப்படம் மற்றும் 2 குறும்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டியிட்ட நிலையில் 2 விருதுகளை இந்திய படைப்புகள் உறுதி செயதன. எதிர்பார்த்தது போலவே ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. மேலும் ’தி எலிபண்ட் விஸ்பெரெஸ்’ சிறந்த குறு ஆவணப்படத்துக்கான விருதினை பெற்றது.
இவற்றுக்கு அப்பால், ஆஸ்கர் மேடையில் அதிக விருதுகளைப் பெற்ற திரைப்படமாக சர்வதேசளவில் கவனம் ஈர்த்துள்ளது, ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற திரைப்படம். மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் போட்டியிட்ட நிலையில் 7 ஆஸ்கர் விருதுகளை இந்த திரைப்படம் தட்டித்தூக்கியுள்ளது. இந்த வகையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் ஒட்டுமொத்த கவன ஈர்ப்பையும் இந்த திரைப்படமும், அதன் கலைஞர்களும் கவர்ந்துள்ளனர்.
சிறந்த திரைப்படத்துக்கான விருதினை ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் வென்றது. இதன் சகோதர இயக்குநர்களான டேனியல் பிரதர்ஸ், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதினை வென்றனர். இந்த வரிசையில் சிறந்த நடிகைக்கான விருதை மிச்செல் யோ, சிறந்த துணை நடிகை விருதினை ஜேமி லீ கர்டிஸ், சிறந்த துணை நடிகருக்கான விருதினை கே ஹூய் குவான் ஆகியோர் வென்றனர். மேலும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை அள்ளியிருக்கிறது.