பிரபல ஹீரோ படத்தில் இருந்து இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் விலகியுள்ளார்.
தமிழில் ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’, ‘வீரம்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். டிஎஸ்பி என்று அழைக்கப்படும் இவர் இசையில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், சல்மான்கான் தயாரித்து நடிக்கும் இந்திப் படத்துக்கு இசை அமைக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார்.
இந்தப் படத்துக்கு முதலில், 'கபி ஈத் கபி தீபாளி' என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இப்போது ’பைஜான்’ என்று தலைப்பை மாற்றியுள்ளனர். இதில் பூஜா ஹெக்டே, தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். ராம்சரண் தேஜா ஒரு பாடலில் சல்மான் கானுடன் ஆடுகிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். அனலரசு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். பர்ஹத் சாம்ஜி இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு இசை அமைப்பதை தேவிஸ்ரீ பிரசாத்தும் உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், திடீரென இப்படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். அவர் இசை அமைத்த ட்யூன்கள் சல்மான் கானுக்கும், அவர் டீமுக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேவிஸ்ரீ பிரசாத் விலகியுள்ளார்.
ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இசை அமைப்பாளரை பயன்படுத்த சல்மான் கான் முடிவு செய்துள்ளதாகவும் பின்னணி இசைக்கு கே.ஜி.எஃப் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.