
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
மடோனா அஷ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. படம் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் கடந்த 14ஆம் தேதி வெளியான நிலையில், படம் ஓடிடியில் வெளியாவது குறித்தும் படக்குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ‘மாவீரன்’ படம் பிரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் வெளியாக இருக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ திரைப்படங்கள் 100 கோடியை வசூல் செய்தது. ஆனால், ‘பிரின்ஸ்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது. ‘டாக்டர்’, ‘டான்’ படத்தை அடுத்து ‘மாவீரன்’ திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.