படத்தில் இருந்து நீக்கியதால், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள திரைப்பட இயக்குநர் ஓமர் லுலு. இவர், ஹேப்பி வெட்டிங், ஒரு அடார் லவ், தமாக்கா ஆகிய மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். இதில் ’ஒரு அடார் லவ்’ படம், பிரியா பவானி வாரியரின் கண் சிமிட்டும் காட்சிக்காகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அடுத்து ’நல்ல சமயம்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்துக்கு செய்தி தொடர்பாளராக வழூர் ஜோஸ் என்பவரை நியமித்திருந்தார். மலையாளத் திரையுலகின் பிசியான செய்தி தொடர்பாளர் அவர். சமீபத்தில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ உட்பட பல்வேறு படங்களுக்குப் பணியாற்றியுள்ளார். திடீரென அவரை மாற்றிவிட்டு பிரதீஷ் என்பவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார் ஓமர் லுலு.
வழூர் ஜோஸ் போனை எடுப்பதில்லை என்றும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாலும் புதியவருக்கு வாய்ப்புக் கொடுத்ததாக ஓமர் லுலு தெரிவித்துள்ளார். இந்நிலையில், படத்தில் இருந்து நீக்கியதற்காக வழூர் ஜோஸ், தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் ஓமர் லுலு தெரிவித்துள்ளார்.
இது கேரள திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது