’ஜெயிலர்’ படப்பிடிப்பில் இருந்து இயக்குநர் நெல்சன் பிரேக் எடுத்திருக்கிறார்.
’பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்திருக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து இயக்குநர் நெல்சன் பிரேக் எடுத்திருக்கிறார். கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்திலும் அவர் பகிர்ந்திர்க்கிறார்.
‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அடுத்த ஷெட்யூல் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது. நடிகர் சிவராஜ்குமார் தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். அது முடித்ததும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.