கமல்ஹாசனை இயக்க வந்த வாய்ப்பை கடைசி நேரத்தில் இயக்குநர் மிஷ்கின் தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணமும் தற்போது சொல்லப்படுகிறது.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் மிஷ்கின். 'சவரக்கத்தி' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் 'லியோ', சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் இனி இயக்கவேமாட்டாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பினர்.
ஆனால், இப்போது அடுத்தடுத்து படங்கள் இயக்குவதிலும் கூடுதலாக இசையமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் மிஷ்கின். இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் 'ட்ரையின்' படத்தின் படப்பிடிப்பும் இப்போது நடந்து வருகிறது.
மிஷ்கினின் 'அஞ்சாதே' படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து கமல் ஹாசனிமிருந்து மிஷ்கினுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி மிஷ்கின் ஒரு கதையை சொல்ல அது கமலுக்கும் பிடித்துவிட்டதாம். அந்தக் கதையை இரண்டு பேரும் மெருகேற்றியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒருகட்டத்தில் அந்தக் கதையை முழுமையாக முடிக்காமல் மிஷ்கின் வெளியேறிவிட்டாராம்.
அந்தக் கதைக்கு பதிலாக வேறு கதை சொல்லுங்கள் என கமல்ஹாசன் அதன் பிறகு கேட்டிருக்கிறார். ஆனால் இந்த முறை மிஷ்கின் திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் கமல் கதையில் அதிகமாகத் தலையிட்டதுதான் என்று கூறப்படுகிறது.