விக்ரம் படத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டது எப்படி? என்பது பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாதிவரை நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரே ஒரு வசனம் மட்டுமே இருக்கும். ஃபகத் பாசிலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஹீரோக்கள், கதைகளில் தங்களுக்கே முக்கியத்துவம் வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் மற்ற நடிகர்களுக்கு இடம் கொடுத்து கமல் நடித்துள்ளார்.
இது எப்படி நடந்தது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது, `` ’விக்ரம்’ படத்தின் வெற்றி, சந்தோஷத்தைத் தாண்டி பயத்தையும் கொடுத்திருக்கிறது. இன்னும் பொறுப்போடு படம் இயக்க வேண்டும் என்கிற பயம் அது. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கு நன்றி. விக்ரம் படத்தில் முதல் பாதியில் கமல்ஹாசனுக்கு வசனம் இருக்காது. ஒரே ஒரு வசனம் மட்டுமே வரும். அவர் பல பரிசோதனை முயற்சி படங்களில் நடித்திருக்கிறார். இதுவும் அப்படிப்பட்ட முயற்சி என்று அவரிடம் சொன்னதும் ஒப்புக்கொண்டார்'' என்று கூறினார்.