ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'படையப்பா'. இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை வைத்து தான் நீலாம்பரி கேரக்டரை உருவாக்கினேன் என்று அதன் இயக்குநர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'படையப்பா'. நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில் எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாகவும், ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நினைவு கூறும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இப்படத்தில் என்னதான் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் அவருக்கு பிரச்சினை கொடுக்கும் வில்லியாக நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. பணக்காரத் திமிர் கொண்ட வில்லியாக ரஜினியை அடைய வேண்டும் என்ற முனைப்போடு அவருக்கு பிரச்சினை கொடுத்து வந்த நீலாம்பரி இறுதியில் இறந்து விடுவார்.
இந்த படம் வெளியானபோது நீலாம்பரி கதாபாத்திரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்ற சலசலப்பு எழுந்தது. ஆனால், அதற்கு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அப்போழுது விளக்கம் எதுவும் கொடுக்காத நிலையில் இப்போது அது குறித்து மனம் திறந்து உள்ளார்.
இந்த படம் வெளியாகி இருந்த சமயத்தில் ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் மோதல் இருந்தது ஊர் அறிந்த விஷயம். இதனால் நீலாம்பரி கதாபாத்திரத்தை ஜெயலலிதாவை வைத்துதான் கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கி இருக்கிறார் என அப்போது ரசிகர்கள் பேசி இருந்தனர்.
தற்பொழுது 'முத்து' படம் இந்த மாதம் 8-ம் தேதி ரீரீலீஸாக உள்ளது. இந்த நிலையில் இதற்கான சந்திப்பு ஒன்றில், 'படையப்பா' குறித்தும் நீலாம்பரி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்ட போது அந்த கதாபாத்திரத்தை ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் உருவாக்கினேன் என வெளிப்படையாக உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.