
பிரபல இயக்குநரின் படத்தில், கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜா. 'ஆத்தா உன் கோயிலிலே', 'சோலையம்மா', 'எட்டுப்பட்டி ராசா', 'என் ஆசை ராசாவே' உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் ஆகியோரின் தந்தையான இவர், ’மெளன மொழி’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இந்தப் படம் 1992-ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர், இப்போது மீண்டும் நடிக்கிறார்.
'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கிய மீரா கதிரவன் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இஸ்லாமிய குடும்பத்தைப் பற்றிய இந்தப் படத்தில் குடும்பத் தலைவராக, இயக்குநர் கஸ்தூரி ராஜா நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், தென்காசி அருகே நடந்து வருகிறது. இதை அடுத்து கஸ்தூரி ராஜா, தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.