இயக்குநர் பாலா, தனது மனைவியை சட்டப்பூர்வமாகப் பிரிந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா, சேது, நந்தா, பிதாமகன், பரதேசி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக, ‘நாச்சியார்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அவரும் அவர் மனைவி முத்துமலரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இருவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு மதுரையில் பிரமாண்டமாகத் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரார்த்தனா என்ற மகள் இருக்கிறார். பாலாவுக்கும் அவர் மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன. இருவரும் நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்தனர் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர். கடந்த 5 ஆம் தேதி இவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இயக்குநர் பாலாவின் விவாகரத்து திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.