நடிகர் சித்திக்
நடிகர் சித்திக்

`திலீப் செய்தது தவறுதான், இருந்தாலும் அவர் பக்கம்தான் நிற்பேன்'- பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல நடிகரிடம் விசாரணை

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் பிரபல நடிகரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து பல்சர் சுனி உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் கைது செய்தனர். கைதான திலீப், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அதை அவர் பார்த்தது தனக்குத் தெரியும் என்று இயக்குநர் பாலச்சந்திர குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரி டிஎஸ்பி பைஜு பவுலோசை கொல்ல நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், உறவினர் சூரஜ் ஆகியோர் சதி திட்டம் தீட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையே நடிகை கடத்தல் வழக்குத் தொடர்பாக, நடிகர் சித்திக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பிரபல மலையாள நடிகரான சித்திக், தமிழில், ரங்கூன், வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த ஒரு பேட்டி ஒன்றில், நடிகர் திலீப் செய்தது தவறுதான் என்றும் இருந்தாலும் அவர் பக்கம்தான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாகவும், இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி பல்சர் சுனி எழுதிய கடிதத்தில் சித்திக் பெயர் இடம்பெற்றிருந்தது பற்றியும் குற்றப்பிரிவு போலீஸார், அவரிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in