`பொன்னியின் செல்வன்’ படத்தில் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேனா? - `ஜெயம்’ ரவி விளக்கம்!

`பொன்னியின் செல்வன்’ படத்தில்  சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேனா? - `ஜெயம்’ ரவி விளக்கம்!

’பொன்னியின் செல்வன்’ படத்தில் சிம்பு இருந்தால் நடிக்க மாட்டேன் என வெளியானச் செய்திக்கு நடிகர் ‘ஜெயம்’ ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த மாத இறுதியில் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் இயக்குநர் மணிரத்தினம், நடிகர்கள் கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் நடிகர் ‘ஜெயம்’ ரவியிடம் ‘’பொன்னியின் செல்வன்’ படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என சொன்னீர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மைதானா?’ என கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ‘ஜெயம்’ ரவி, ‘இது போல எல்லாம் யார் செய்திகளைப் பரப்புவார்கள் எனத் தெரியவில்லை. நான் சொன்னால் கேட்கக்கூடிய நபர் இல்லை இயக்குநர் மணிரத்தினம்.

அவரே இந்தப் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என நான் நடிக்க வந்திருக்கிறேன். இப்படி ஒரு தகவல் வந்தபோது, சிம்புவே எனக்கு கால் செய்து, ‘ஒருவேளை நானும் நீயும் இந்தப் படத்தில் ஒன்றாக நடிப்பதாக இருந்தால் முதலில் சந்தோஷம் அடையக்கூடிய நபர் நீதான். அதனால், இந்தச் செய்திகளைப் பற்றிக் கவலைப்படாதே’ என சிம்பு என்னிடம் தெரிவித்ததாக ‘ஜெயம்’ ரவி பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in