’புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக, நடிகை சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் பாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.
தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகி இருக்கிறது. தெலுங்கைப் போலவே இந்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இது இந்தி திரைபிரபலங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை சமந்தா ஆடியுள்ள ’ஊ...சொல்றியா மாமா’ பாடல் ஹிட்டாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
‘முதலில், இதில் ஆடுவதற்கு சமந்தா தயங்கினார். அல்லு அர்ஜுன்தான் சமாதானப்படுத்தி ஆட வைத்தார். இந்த 3 நிமிட பாடலுக்காக ரூ.5 கோடி கொடுத்திருக்கிறார்கள். அடுத்த பாகத்திலும் அவரை ஆட வைக்க பேச இருக்கிறார்கள்’ என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.