’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் 3 தோற்றத்தில் நடிக்கிறார் என்று அந்தப் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்தார்.
‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கு ‘கேப்டன் மில்லர்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படம் 1930-40-களின் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது, “எனது முந்தைய படங்களை விட இது பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தை உருவாக்கும் நோக்கில் நான் உருவாக்கிய கற்பனை கேரக்டர்தான் கேப்டன் மில்லர். இந்தப் படத்தின் கதையை எழுதும்போது தனுஷை தவிர வேறும் யாரும் என் நினைவுக்கு வரவில்லை. அவரை மனதில் வைத்தே இந்தக் கதையை உருவாக்கினேன். மில்லர், தனுஷின் பெயர்தான் என்றாலும் அவருக்கு மேலும் இரண்டு பெயர்கள் இருக்கின்றன. அவர் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். இந்த கதை அனைத்துப் பகுதிகளுக்குமானது என்பதால் பான் இந்தியா படமாக இதை உருவாக்குகிறோம். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது” என்றார்.