தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து இயக்குநரும் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் கடந்த மாததே தனது ட்விட்டர் பதிவில் சூசகமாக பதிவிட்டிருக்கிறார். இந்த ட்வீட் தற்போது பலரது கவனம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது மனைவியும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஜஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு திடீரென அறிவித்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது. இவர்கள் இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
‘கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாகப் பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாகப் பிரிந்து செல்ல முடிவுசெய்துள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார் தனுஷ். இதேபோன்ற ஐஸ்வர்யாவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன், கடந்த டிசம்பர் 3-ம் தேதி போட்ட ட்வீட் பலரது கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில், “தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு பிரச்சினையே இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குமிடையேயான பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போதுதான், செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்கக் கூடும் என்கிறார்கள் நெட்டிசன்கள். தவிர அவர் சமீபமாக வாழ்க்கை தத்துவங்களை அதிகமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.