கொலை சதி வழக்கு: நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரிக்க முடிவு

கொலை சதி வழக்கு: நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரிக்க முடிவு

போலீஸாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் உட்பட 3 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு, காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி நடிகர் திலீப், அவர் தம்பி அனூப், திலீப்பின் மைத்துனர் சூரஜ் உட்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திலீப் உட்பட 6 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினர். அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். திலீப்பின் 3 செல்போன்கள் உட்பட அவர்களின் செல்போன்களை நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்கும்படி, நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதன்படி அதை சமர்ப்பித்தனர். அந்த செல்போன்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்த வழக்கில் திலீப் உட்பட 6 பேருக்கும் உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள செல்போன்களில் இருந்து, முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று குற்றப்பிரிவு போலீஸார் எதிர்பார்க்கின்றனர். அந்த அறிக்கை இன்னும் சில நாட்களில் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அந்த அறிக்கை கிடைத்ததும், நடிகர் திலீப், அவர் சகோதரர் அனூப், மைத்துனர் சூரஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in