நடிகர் திலீப்பிடம் 7 மணி நேரம் விசாரணை
நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ள கேரள உயர்நீதிமன்றம், ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப்பிடம் நேற்று போலீஸார் விசாரணை நடத்தினர். எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் ஆஜரான நடிகர் திலீப்பிடம், குற்றப்பிரிவு ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையில் 2 எஸ்பி-க்கள் விசாரணை நடத்தினர். நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ, திலீப்பிடம் இருப்பதாக சினிமா இயக்குநர் பாலச்சந்திரகுமார் ஏற்கெனவே கூறியிருந்தார்.
திலீப்பின் செல்போனில் இருந்த பல முக்கிய விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இவை தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 7 மணி நேரம் விசாரணை நடந்தது. இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.