முக்கிய தகவல்களை சொன்ன திலீப்; 3வது நாளாக இன்றும் விசாரணை

இயக்குநருக்கு சம்மன்?
 நடிகர் திலீப்
நடிகர் திலீப்

விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது.

பிரபல மலையாள நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் அதைப் பார்த்தார் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொல்ல, திலீப் சதி திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இதையடுத்து திலீப், அவர் சகோதரர் அனூப், திலீப்பின் மைத்துன டி.என்.சூரஜ், உறவினர் அப்பு, நண்பர் பைஜூ செம்மங்காடு, ஓட்டல் உரிமையாளர் சரத் ஆகிய 6 பேர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் திலீப் உட்பட 6 பேரும் ஜனவரி 23 , 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து நடிகர் திலீப் கமலச்சேரியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஆஜரானார். அவரிடம் முதல் நாள் 11 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. திலீப்பின் பல பதில்கள் முரணாக இருந்தது என்றும் நம்பகத்தன்மையுடன் இல்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில் இயக்குநர் பாலசந்திரகுமாருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் அந்த முடிவை மாற்றினர். இப்போதைய நிலையில் அவருக்கு சம்மன் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த விசாரணையின் போது பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெறுகிறது. நடிகர் திலீப் உட்பட அனைவரும் விசாரணைக்கு ஆஜராயினர். இந்த விசாரணை அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனடிப்படையில் திலீப்புக்கு முன்ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in