தனது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சிரஞ்சீவியின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனாவின் உருமாற்ற வைரஸான டெல்டாவுடன் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது.
இந்தத் தொற்றுக்கு திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, தமன், மம்முட்டி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் உள்பட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவருடைய அம்மா அஞ்சனா தேவிக்கு இன்று பிறந்தநாள். வழக்கமாக ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அம்மாவிடம் ஆசிபெறும் நடிகர் சிரஞ்சீவி, கரோனா காரணமாக, அம்மாவை சந்தித்து ஆசிபெறவில்லை. இதையடுத்து ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
அதில், “அம்மா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நான் தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதால், உங்கள் ஆசிர்வாதத்தை நேரடியாகப் பெற முடியவில்லை. உங்கள் ஆசி இப்போது மட்டுமல்ல, மறுமைக்கும் என்மீது இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். சிரஞ்சீவியின் இந்தப் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.