தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். சிரஞ்சீவி, விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக திரைப்பிரபலங்களும் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அண்மையில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அருண்விஜய், வடிவேலு, சத்யாராஜ், விஷ்ணு விஷால், மம்முட்டி, துல்கர் சல்மான், ஜெயராம், மகேஷ் பாபு, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “முன்னெச்சரிக்கையாக இருந்தும் லேசான அறிகுறிகளுடன் எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, விரைவில் நலம்பெற அவருக்கு, பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும்நிலையில், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.