தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, சிம்புவுடன் நடித்திருந்த மாநாடு திரைப்படம் வரவேற்பை பெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
இவர், கடந்த 2002-03 முதல் 2007 வரையிலான ஆறு நிதியாண்டு மற்றும் 2009-10 ஆம் நிதியாண்டுக்கு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
பதில் அளிக்காததால் அவருக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015-ம் ஆண்டு 6 வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான வழக்குகள் எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே. சூர்யா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால், வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி, வழக்கை ரத்து செய்ய கோரிய அவர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.