நரேன், கதிர், ஆனந்தி உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘யூகி’. இந்தப் படம் தொடர்பாக காமதேனு யூடியூப் தளத்திற்கு நடிகர் கதிர் கொடுத்திருந்தப் பேட்டியில், சமீபத்திய காலத்தில் பிரபலங்களால் வாடகைத்தாய் என்ற விஷயம் கவனத்திற்குள்ளானது. அட்லி, நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்துப் பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறார்.
நயன்தாரா- விக்னேஷ்சிவன் தம்பதி, பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களால் வாடகைத்தாய் என்ற விஷயம் கவனத்திற்கு வந்து விவாதப் பொருளானது. ‘யூகி’ படத்திலும் வாடகைத்தாய் என்ற விஷயம் அங்கமாக இருப்பதால், வாடகைத்தாய் என்ற விஷயம் பிரபலங்களால் கவனத்திற்குள்ளானது பற்றி கேட்டபோது அவர் கூறியிருப்பதாவது, “இது அவரவருடைய தனிப்பட்ட விஷயம் எனும்போது அதில் நான் மட்டுமல்ல, யாருமே கருத்துத் தெரிவிக்க முடியாது. நிறையப் பேர் இந்தப் படம் அது குறித்தானதா என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள்.
இதன் படப்பிடிப்பு முடிந்தே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அதனால், இந்த ஒரு விஷயம் எதேச்சையாக அமைந்ததே தவிர வலிந்து வைக்கப்பட்டது கிடையாது” என்றார்.
அதேபோல, அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து, ‘பிகில்’ படத்தில் கதிரும் நடித்திருப்பார். மீண்டும் இந்த கூட்டணி நடக்குமா என்று கேட்டதற்கு, “அட்லி இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். விஜய் சாரும் அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸ் வைத்திருக்கிறார். அதனால், இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்பதைப் பொறுத்துதான் எல்லாம். அதில் நான் இருக்கிறேனா என்பதை இயக்குநர்தான் சொல்ல வேண்டும். அதுபோன்ற ஒரு வாய்ப்பிற்காக நானும் காத்திருக்கிறேன்” என்றார்.