நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு: மீண்டும் சர்ச்சையில் `ஜெய்பீம்' படக்குழு

நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு: மீண்டும் சர்ச்சையில் `ஜெய்பீம்' படக்குழு

நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் திரைப்படக் குழுவினர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் சூர்யா தயாரித்து நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விருதுகளை குவித்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் உண்மை கதாபாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டன.

அதேபோல இத்திரைப்படத்தின் மற்றொரு உண்மை கதாபாத்திரமும், ராஜாக்கண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியதற்காக தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் வரும் 26-ம் தேதிக்குள் சாஸ்திரி நகர் போலீஸார் மனுதாரரான கொளஞ்சியப்பன் சுட்டிக்காட்டியுள்ள நடிகர் சூர்யா, அவரது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இயக்குநர் ஞானவேல் உட்பட சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகர் சூர்யா உள்ளிட்ட ஜெய்பீம் திரைப்படக் குழுவினர் மீது சாஸ்திரி நகர் போலீஸார் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்தகட்டமாக வரும் 26-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு உண்டான அறிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் போலீஸார் தாக்கல் செய்யவுள்ளனர். ஜெய்பீம் படம் வெளியான நாள் முதல் தற்போது வரை சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in