எந்திரன் திரைப்பட கதை விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிரான விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், ஜூகிபா என்ற தலைப்பில், தாம் எழுதிய நாவலை இயக்குநர் ஷங்கர் திருடியதாகவும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அவர் கடந்த 2010-ம் ஆண்டு அளித்த புகார் தொடர்பான வழக்கு தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஷங்கரிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது.
அதன் அடிப்படையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி ஆரூர் தமிழ்நாடனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.